Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸாரில் கைது செய்ததில் க்ளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாகந்துரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் க்ளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் க்ளப் வசந்தவிடம் அந்தப் பணத்தைத் தருமாறு கோரியுள்ளார்.

ஆனால், அந்தப் பணத்தை க்ளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் க்ளப் வசந்தவை கொலை செய்யத் திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் க்ளப் வசந்தவை இலக்கு வைத்து அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் பச்சை குத்தும் நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்தும் கலை அறிந்தவர் எனவும், எனினும் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

பச்சை குத்தும் நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, க்ளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் குறித்த நபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் 10 இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய க்ளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்று க்ளப் வசந்த, பாடகி கே.சுஜீவா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 நொடிகளில் சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பச்சை நிலைய உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles