ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரான குணதிலக்க ராஜபக்ஷ கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குணத்திலக்க ராஜபக்ஷவுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் மாடிப்படியில் வைத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை உதைத்ததாகவும், இதனால் தான் காயமடைந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்தார்.