வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கடந்த சனிக்கிழமை (11) சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணையில் பொத்துவில் பிரதேசத்தில் மற்றைய சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொத்துவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.