இரத்தினபுரி மாவட்டத்தில் நிலாவும் தமிழ் மொழி மூலமான கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நேற்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
நீண்ட காலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை என தெரிவித்தார்.
இதனால் குறித்த மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. தற்போது கணிதம் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கான பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வு இடம் பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
மூனறு மொழி மூலங்களுக்குமான நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது எனவே மாகாண ஆளுநரிடம் ஆசிரியர் பற்றாக்குறைக்கான தரவுகளை பெற்று இரண்டு வாரங்களுக்குள் அந்த பிரச்சினைக்கான தீர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவும் எதிர்பார்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.