முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கெப் வாகனம் கடக்க முயன்ற போது, அது திடீரென இயங்காமல் நின்றுள்ளது.
எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் என்ற அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் சாரதி பாரவூர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது, கெப் வாகனத்தில் பாரவூர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.
அதில் ஒருவர் மேல் பாரவூர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.