இலங்கையில் பிடிபட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகை மீட்க, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் படகுகள் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் படகுகளுக்கான விசாரணை நேற்று முன்தினம் (20) திகதியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு திகதியிடப்பட்ட இரு படகுகளின் வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, படகுகளை மீட்டுச் செல்லும் நோக்கில் உரிமையாளர்கள் இருவரும் சட்டத்தரணிகள் மூலம் மன்னார் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
முதல் படகின் வழக்கு முதலில் எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேசமயம், மன்றில் பிரசன்னமான படகின் உரிமையாளரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய தமிழகம் – இராமநாதபுரம் – பாம்பனைச் சேர்ந்த படகு உரிமையாளறே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.