மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளரின் வழிகாட்டலின்கீழ் தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்றிரவு கல்குடா தபால் நிலையத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு பிக்கு உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன், வலம்புரி சங்கையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்று பொருளான வலம்புரிசங்கையும் விசேட அதிரடிப்படையினர் கல்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
