உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஸஹ்ரானின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீட்டில் நேற்று இரவு ஸஹ்ரானின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்துள்ளனர்
2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஸஹ்ரான் பிரிவினைச் சேர்ந்த 3 பேரும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசீமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.