தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படும் ஒருவர் மனைவி இறந்து 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலிய – மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகத்தின் பேரில் களுத்துறை குற்றப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
2023 ஏப்ரல் 10 ஆம் அன்று இரவு, சந்தேக நபர், தனது மனைவி முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்ததாக கூறி அவரை பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2023 மே 7ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மழுங்கிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக நீதிமன்ற பதிவேடுகளில் பதிவாகியுள்ளது.