தீயினால் நாசமான வீடொன்றில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் நேற்று (23) இரவு 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரச்சிக்கட்டுவ, கிரிவேல்கெலே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய கொஹிலகே குணவதி என்ற பெண்ணின் சடலம் வீட்டினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது கணவருடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு (23) வீட்டில் ஏற்பட்ட தீயை பிரதேசவாசிகள் அணைக்க முயற்சித்த போதிலும், வீட்டினுள் இருந்த பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் கணவருக்கு தீயினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தீ எவ்வாறு பரவியது என்பது தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.