திருமணம் ஆகாத பெண் ஒருவரை (35) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 5 இலட்சம் ரூபா அபராத தொகை வழங்க வேண்டும் என நுவரெலியா மேல் தீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய குற்றவாளி கடமை நேரத்தில் 35 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கான தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி இன்று வழங்கினார்.
இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த குற்றவாளியான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபா அபராத தொகை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
