மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகக் கருதப்படும் வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிரிஹான – ஜுபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, படுக்கையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சோதனையின் போது, அந்த வீட்டின் சமையலறையில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 80 வயதுடைய ஆண் எனவும் பெண் 96 வயதுடையவர் எனவும், குறித்த தம்பதி மேற்கண்ட வீட்டில் வசித்து வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது இதுவரை வெளிவரவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.