ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 9 ஆவது பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 33 வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார். விருந்தினர்கள் இன்று மு.ப 09.45 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.