25 வயதான அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வந்திருந்த போதே அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி கண்டியில் தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், தனது 6000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதி நானுஓயா பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளை நோக்கி ரயிலில் பயணித்த இந்த யுவதி அழுதுகொண்டிருப்பதைக் கண்ட சிலர் நானுஓயா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2400 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தங்க வளையல், 3600 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நெக்லஸ்இ வைரம் பதித்த இரண்டு காதணிகள் என்பன சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளதாக குறித்த யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கண்டி பொலிஸ் குற்றப்பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முறைப்பாடு செய்த இளம் பெண்ணையும் சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்க முயற்சித்த போதும் அவர் ஆஜராக மறுத்துள்ளார்.
கண்டி விடுதியொன்றில் சுற்றுலா வழிகாட்டி மற்றும் மற்றுமொரு நபருடன் தாம் மது அருந்தியதாகவும், பின்னர் நித்திரையிலிருந்து எழுந்த போது , படுக்கையில் அரை நிர்வாணமாக இருந்ததாகவும், இடையில் நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை எனவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
