இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அதன் பாடநெறிகள் மற்றும் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து ஐஐடி-மெட்ராஸுடன் இலங்கையில் வளாகத்தை நிறுவுவது குறித்து கலந்துரையாடியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த ஐஐடி மெட்ராஸ் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.