பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நகரில் சிம் கார்ட் விற்பனை செய்யும் ஒருவரின் காலில் மன்னா கத்தியால் தாக்கி, ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சிம் கார்ட்கள், பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்து, பண்டாரகம பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் சாவடியை உடைத்து நபர் ஒருவரை தாக்கி, கோனடுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உத்தியோகத்தரை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் மேற்படி இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஒரு மணித்தியாலத்திற்குள் இந்த குற்றங்களைச் செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
‘புஸ் கோட்டா’ என அழைக்கப்படும் 27 வயதான நபர் மற்றும் அவரது 18 வயது உதவியாளர் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னாள் இராணுவ சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று அவர்கள் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.