ஓமானில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த 39 வயதுடைய இலங்கை பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிக்கவெரட்டிய கொத்தேர பகுதியைச் சேர்ந்த ஒருவரும், சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரும் இணைந்து போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சுற்றுலா விசாவை பெற்றுக்கொடுத்து குறித்த பெண்ணை ஓமானுக்கு அனுப்பியதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த ஜே.ஏ.ஷிரோமி ஜயக்கொடி என்ற 39 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 18 வருடங்களாக வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
அங்கிருந்த ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்கு பிரச்சினை இருக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.