தபால் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இது அடையாள வேலைநிறுத்தம் எனவும், இது தொடர்பான மோசமான முடிவுகளை அரசாங்கம் மீள பெறாவிட்டால் எதிர்காலத்திலும் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேரம் வேலை நிறுத்தம் நீடித்தது.
நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுலா விடுதிகளை ஆரம்பிக்கும் நோக்கில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் என்பவற்றை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால் நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
தபால் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் 3 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார வலியுறுத்தியுள்ளார்.