இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசாங்கத்துக்கு அதிக வருவாயை பெற்றுக் கொடுப்பதற்காக, அடுத்த ஆண்டு, மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்பனவே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
பரம்பரை வரி என்பது ஒருவர், தமது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும்.
நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சு பணிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் அறிக்கையின்படி அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.