இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நாட்டின் நோக்கத்தை அடைவதற்கான விரிவான திட்டங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, வருடாந்தம் குறைந்தது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்ட நன்கு கட்டமைக்கப்பட்ட மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஏற்றுமதி மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பதற்காக இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் உள்ள சவால்களை உடனடியாக நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழில்துறையில் இந்த ஆண்டு இலக்கு வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.