உரிய அனுமதிப்பத்திரமின்றி, சிங்கராஜ வனத்தில் இருந்து, விலங்குகளினதும், தாவரங்களின் பாகங்களை கொண்டுசெல்ல முயற்சித்த மூன்று ஈரானிய பிரஜைகளும், ஒரு இலங்கைப் பிரஜையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம், சிங்கராஜ வனத்திற்கு சென்ற குறித்த நால்வரும், லங்காகம அனுமதிச்சீட்டு விநியோக கருமபீடத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்கள் உரிய அனுமதிப்பத்திரமின்றி, விலங்குகளினதும், தாவரங்களினதும் பாகங்களை கொண்டுசெல்ல முயற்சித்தமை கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.