வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் கல்கஹேவா மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஷ்இ வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதை தான் பார்த்ததாக தெரிவித்தார்.
ஒரு நாள் கோட்டை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் தாம் இருந்தபோது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து தனது மனைவியை கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சியாளர் கூறினார்.
ராஜகுமாரியையும் அழைத்து சென்ற பொலிசார் கைவிலங்கின் மறு மூலையை அவர் கையில் திணித்ததாகவும் சாட்சி கூறியுள்ளார்.
அழைத்துச் செல்லும் போது அவர் ஆரோக்கியமாக இருந்ததுடன், நன்றாக நடந்து சென்றதாகவும் சாட்சி கூறினார்.
வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், ‘மோதிரம், வாசனை திரவம், செருப்பு ஆகியவற்றை நீ தானே திருடிச் சென்றாய்’ என்று கூறியதாக சாட்சியாளர் மேலும் தெரிவித்தார்.
தங்கநகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
42 வயதான ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பெண் மே 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.