நிர்வாணக் காணொளிகளை ஆதாரமாக கொண்டு சிறுமி ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மின்னேரியா முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
15 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முன்னதாக நிர்வாண காட்சிகள் அடங்கிய காணொளியை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்போவதாக, தெரிவித்து கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த பாடசாலை சிறுமி ஒருவரை அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களின் மூலமாக சிறுமியுடன் இராணுவ சிப்பாய்க்கு நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இராணுவ சிப்பாயின் கோரிக்கைக்கு அமைய, குறித்த சிறுமி நிர்வாண காணொளி தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த காட்சிகளை தமது கைபேசியில் காணொளியாக பதிவு செய்த குறித்த இராணுவ சிப்பாய், மீண்டும் அவ்வாறானது ஒரு அழைப்பை ஏற்படுத்துமாறும், மறுக்கும் பட்சத்தில் அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பகிரப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொலிஸார் மின்னேரியா இராணுவ முகாமுக்கு, சம்பவம் தொடர்பில் அறியப்படுத்தியதை அடுத்து, சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரினதும், முறைப்பாட்டாளரினதும் கைபேசிகள் விசாரணைக்காக பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நேற்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் கைபேசிகள் உள்ளிட்ட ஏனைய சாதனங்களை பயன்படுத்தும்போது, பெற்றோர்கள் அது குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.