பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் நேற்று (05) இரவு ரயில் நிலையத்திற்கு அருகில் ட்ரோனை பறக்க விட்டுள்ளார்.
இதன்போது பம்பலப்பிட்டி ஓசன் டவர் கட்டிடத்தில் அமைந்துள்ள விமானப்படை சோதனைச் சாவடியின் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய பல்கலைக்கழக மாணவனிடம் விசாரணை நடத்திய போது, பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவனும் அவனது பிடியில் இருந்த ட்ரோனும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
