அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் அறுவரின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (12) வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க தெரிவித்தார்.
அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் புதிய செயலாளராக யமுனா பெரேராவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எம்.டபிள்யு.எஸ் சமரதிவாகரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியதாக டிகிரி கே. ஜயதிலக்க குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ஷவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியதாக உதவிச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும், இலங்கை அணுசக்தி சபையின் தலைவராக பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசாவின் நியமனத்துக்கும், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரத்னசிறி கலுபஹனவின் நியமனத்துக்கும், மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் தலைவராகப் பொறியியலாளர் ஏ.கல்கெடியவின் நியமனத்துக்கும், பகிரங்க அரங்காட்டுகைச் சபையின் தலைவராக ஸ்டெல்லா மாரப்பனவின் நியமனத்துக்கும், இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக ஜயந்த விஜேரத்னவின் நியமனத்துக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.