களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் ஜோடியினர், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதியாக இருந்த நபர் ஆகியோர் இவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது உயிரிழந்த சிறுமியின் தாயார் உட்பட சுமார் 100 பேர் நீதிமன்றத்திற்கு முன்பாக காலி வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“மரணித்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்”, “காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும்”, “தரமற்ற கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக களுத்துறை நகரில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.