யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து றொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம்குறித்த கடையில் திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது மிகவும் குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த மற்றும் சமைக்காத கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இன்று பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் ‘டீ’ பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை கடையை மூடி சீல்வைக்குமாறும், கைப்பற்றப்பட்ட 45 கிலோ இறைச்சியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து குறித்த கடை சீல் வைக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட இறைச்சியும் பொது சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.