களுத்துறையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகள் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவ தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவரை விசாரித்து நேற்று (10) வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியை தனக்கு நன்கு தெரியும் என ஆசிரியர் கூறியதாகவும், விசாரணையில் மாணவி தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ரகசியத்தன்மை காரணமாக அந்த தகவல்கள் அனைத்தும் இப்போது வெளியிடப்படமாட்டாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பலர் மாணவிக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றனர்.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னரே அவர் மேல் மாடியின் ஜன்னல் ஊடாக குதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் மாணவியின் தொலைபேசி தரவுகளைப் பெற்றுக் கொண்டு இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி சந்தேக நபர் ஒருவரால் கடலில் வீசப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடிக்க கடற்படையின் சுழியோடிகள் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டதாக களுத்துறை (தெற்கு) காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த பாடசாலை மாணவியுடன் சென்ற இளம் ஜோடியிடம் விசாரித்ததில், அவரது கைபேசி கடலில் வீசப்பட்டமை தெரியவந்தது.
மேலும் பல முக்கிய தகவல்கள் அந்த கைபேசியிலிருந்து வெளிவரலாம் என்பதால் சந்தேகநபரான இளைஞர் ஒருவர் அmதனை கடலில் வீசி எறிந்துள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.