நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (10) மாலை அலுவலக தொடருந்து மற்றும் இரவு தபால்கள் தொடருந்து உட்பட 11 திட்டமிடப்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கான இரவு அஞ்சல் ரயில், பதுளையில் இருந்து கொழும்பு செல்லும் இரவு அஞ்சல் ரயில், கொழும்பில் இருந்து திருகோணமலைக்கான இரவு அஞ்சல் ரயில், திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்லும் இரவு அஞ்சல் ரயில், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையான இரவு நேர நகர்சேர் கடுகதி ரயில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் நகர்சேர் கடுகதி ரயில், புத்தளம் செல்லும் அலுவலக ரயில் மற்றும் ஏனைய அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று (09) இடம்பெற்ற ரயில் நிலைய அதிபர்களின் நிறைவேற்று சபைக் கூட்டத்தின் பின்னர், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு துணை (வணிக)பொது முகாமையாளர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.