ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமையினால் அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு நேற்று (08) கூடிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயற்குழு நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பதவிக்கு ஏ.எச்.எம். பௌசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.