நிலத்தடி சோதனைகளை மேற்கொள்ளும் ஸ்கேனர் கருவியுடன் நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரடியனாறு பகுதியில் வைத்து இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுணதீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் உடனடி வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனையிட்ட போது டொயோட்டா ரக கார் ஒன்றில் நிலத்தடி மண்ணை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலத்தடி ஸ்கேனர் மற்றும் டொயோட்டா காரை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.