நாடாளுமன்றில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பிரச்சினை குறித்து சாணக்கியன் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் வழங்க தயார் இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இந்தநிலையில், நல்லிணக்க முயற்சிகள் குறித்து அமைச்சர்களான அலி சப்ரியும், அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் வீரர்களாக காட்டிக்கொள்கின்றனர்.
எனினும் இந்த நாடாளுமன்றத்துக்குள் நல்லிணக்க விடயங்கள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தமது மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் போது அது முக்கியத்துவம் அற்ற விடயம் என்று பிரதி சபாநாயகர் கூறுவதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
தனது மக்களின் பிரச்சினை தொடர்பில் உரையாற்றுவதற்காக தான் விடுதலை புலி அங்கத்தவர், இனவாதி என சொல்வதை தாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாக சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்ரி, சாணக்கியன், இனவாத அடிப்படையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.
தாம் தனி இனம் ஒன்றுக்காக செயற்படவில்லை என்றும் முழு இலங்கையர்களின் நல்லிணக்கம் தொடர்பிலேயே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது சாணக்கியனும் பிரதிவாதம் புரிந்தபோதும் நாடாளுமன்ற ஒலிவாங்கி அவருக்கு வழங்கப்படாமையால், அதனை தெளிவாக கேட்கமுடியவில்லை.