வறிய குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச அரிசியை பெற்றுக் கொள்வதற்காக வந்த மக்கள் நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
தலாத்துஓய, புஸ்ஸதன்ன பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்தவர்களின் தகாத நடத்தை காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், வரிசையில் காத்திருந்த போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வீழ்ச்சியடைந்தமையே அவரது மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
நோயாளர் காவு வண்டி மூலம் தலாத்துஓய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அவரது கடைசி விருப்பத்தின்படி, சடலத்தை பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒப்படைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.