மடகஸ்காரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காவல்துறை காவலில் இருந்த மாகந்துரே மதுஷ் போன்ற சந்தேகநபர்கள் விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்த விடயத்தை சுட்டிக்காட்டி சந்தேகநபரின் தந்தை இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது மகனின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறைமா அதிபர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.