பொலன்னறுவை பகுதியில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவனது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (15) அதிகாலை பொலன்னறுவை வேவதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 46 வயதுடய பொலன்னறுவை வேவதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியை இரும்பு கம்பியொன்றினால் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அதன்போது அவரின் மகனும் மகளும் தலையிட்டு தடுப்பதற்கு முயற்சித்தபோது அவர்களையும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்பு கம்பியை பறித்து அவரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.