ஜா – எல பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகத்திற்கு சென்ற ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபர், தனது மனைவி வெள்ளையாக இருப்பதால் தானும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக குறித்த கிரீமை கொள்வனவு செய்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டுக் கழகத்தின் மதுபானக் கடையில் ஊழியராக பணியாற்றிய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் கிளப்பிற்கு வந்து பரிவர்த்தனை செய்து விட்டு வெளியேறிய போது, அவரது கடனட்டை தொலைந்து போனதாகவும், சந்தேகநபர் அதனை பயன்படுத்தி குறித்த கிரீமை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.