கண்டி – அலவத்துகொட பகுதியில் வயல்வெளியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ சிப்பாய் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடமான வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கொண்டு பொலிஸ் மோப்ப நாயான ‘ஏகல்’ வழிகாட்டியதாக அஸ்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக, களத்தில் இறக்கப்பட்ட பொலிஸ் மோப்ப நாயான ‘ஏகல்’ வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை பிடுங்கியதன் பின்னர் வழங்கிய துப்பின் மூலமே குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.
பெண்ணின் சடலம், வயலில் சேற்றுக்குள் அமிழ்த்தப்பட்டு, அதன்மேல் நாற்றுகள் நாட்டப்பட்டுள்ளமை முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
களத்தில் இறக்கப்பட்ட மோப்பநாய் அதிலிருந்து இரண்டு நாற்றுகளை மோப்பம் செய்த பின்னர், வயலுக்குள் சென்று, வயலில் இருந்து வெளியே வந்து, பின்னர் தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்து, சுமார் நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வீடொன்றுக்கு முன்பாக நின்றுக்கொண்டதாக அதை வழிநடத்தும் பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.
அந்த வீட்டுக்கு முன்பாக நின்றிருந்த நபரொருவரை கடந்து சென்ற ‘ஏகல்’ அந்த வீட்டை ஒரேயொருமுறை சுற்றிவந்து வீட்டுக்குள் புகுந்துகொண்டது.
வீட்டுக்குள் புகுந்துகொண்ட ‘ஏகல்’, தன்னையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சென்று, அங்கிருந்த கட்டிலை முகர்ந்துகொண்டே அதன் கீழே அமர்ந்துகொண்டது.
அதன்பின்னரே, அவ்வீட்டில் இருந்த இராணுவ சிப்பாய், சந்தேகத்தின் பேரில் அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த பொலிஸ் மோப்ப நாயான ‘ஏகல்’ இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கு உதவியுள்ளதாக கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.