மறைந்திருக்கும் தொழுநோயாளிகளை கண்டறியும் இரண்டாம் கட்ட நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1,200 நோயாளர்கள் தலைமறைவாகியுள்ளதாக தேசிய தொழுநோய் பிரச்சாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர நேற்று (06) தெரிவித்தார்.
இது முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 35 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று தொழுநோயாளிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அன்றைய தினம் இரு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் நோயாளர்களை அடையாளம் காண எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 3 நோயாளர்கள் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் நோய் பரிசோதனைக்கு குடியிருப்பாளர்கள் வராதது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுவதற்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கவனக்குறைவும் நோயின் மீதான கவனக்குறைவும் காரணமாக இருப்பதாகவும், தன்னார்வ குழுக்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு நோயாளர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.