தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதற்காக அமைச்சு, திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, நிதியமைச்சின் கீழ் குறிப்பிட்ட கணக்குகளை தனியார் வங்கிகளில் ஆரம்பிக்க இடமளிக்க வேண்டும் எனவும் தீரமானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பால் அரச வங்கிகள் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது போனாலும் நாணய கடிதங்களை வெளியிடுதல் உள்ளிட்ட நிதி நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிப்பது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பால் அரச வங்கிகளின் செயற்பாடுகள் முடங்கி மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர நாணய கடன்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.