இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியதாக கூறப்படும் வழக்கில், இன்று காலை நீதிமன்றத்தில் மனுதாரர் மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகளுக்கு இடையில் கடும் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
டயானா கமகேவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட எதிர்தரப்பு சட்டத்தரணிகள் ஆகிய இருதரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து, வழக்கை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதாக கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து, குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக இராஜாங்க அமைச்சர் தற்போது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
இராஜாங்க அமைச்சருக்கு பிரித்தானிய குடியுரிமை உள்ளமையால், இராஜதந்திர கடவுச்சீட்டை அவருக்கு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.