உலகளாவிய கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு சுற்றுலா செல்லக்கூடிய முதல் 20 நாடுகளில் இலங்கையையும் சீனா பெயரிட்டுள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணிகளுடனான விமானம் மார்ச் 3 ஆம் திகதி ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.
சீனாவில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை பெறுவதில் இலங்கை ஆர்வம் காட்டுவது, ஷாங்காய் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரி அனுர பெர்னாண்டோ அந்நாட்டு ஊடகமொன்றுக்கான செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 6 ஆம் திகதி 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு பயணிக்க பயண முகவர் குழுக்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் முடிவை சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்தது.
இந்த நிலையில், ஷாங்காய் மற்றும் கொழும்பு இடையேயான நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து 280,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர். பௌத்த கலாசாரத்தின் செழுமையான பாரம்பரியம், தேயிலைத் தோட்டங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் இயற்கை அழகு என அனைத்தும் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன என்று துணை தூதரக அதிகாரி அனுர பெர்னாண்டோ கூறினார்.
இப்போது கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதால் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.