அளுத்கம பிரதேசத்தில் முதலை குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த முதலை குட்டியை வெளிநாட்டவர்களிடம் காட்டி பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம – கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாமோதர ஆற்றுக்கு அருகில் வெளிநாட்டவர்களுக்கு முதலை குட்டி ஒன்று காட்சிப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 17.5 அங்குல நீளம் கொண்ட ஒன்றரை வயதுடைய முதலை குட்டியுடன் சந்தேக நபரை கைது செய்தனர்.
வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்காக நியமிக்கப்பட்ட முதலையை வைத்திருந்த மற்றும் காட்சிப்படுத்துவதற்காக சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.