இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ்இ கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார்.
இவரை 57 வயதான அவரின் கணவர் கொலை செய்துள்ளதாக தகவலறிந்து பொலிஸார் அங்கு சென்ற போது மனைவி இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.