காதலர் தினத்திற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் கஞ்சா கலந்த சொக்லெட் வகைக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி நேற்று (12) தெரிவித்தார்.
இந்த கஞ்சா கலந்த சொக்லெட் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
காதலர்களுக்காக தயாரிக்கப்படும் இவ்வகை சொக்லெட்டில் கஞ்சா, அஸ்வகந்தா, அதிமதுரம் மற்றும் லுனுவில கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை சொக்லெட்ட்டை சந்தையில் வெளியிடுவதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சா போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இது தடைசெய்யப்பட்ட தயாரிப்பு எனவும், இந்நாட்டில் கஞ்சா பயன்படுத்தப்படுவது மருந்துகள் தயாரிப்பதற்கு மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த தயாரிப்புக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சொக்லேட்டைத் தயாரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டபிள்யூ.ஏ. தனஞ்சய வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த தயாரிப்பு இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1,000 கஞ்சா கலந்த சொக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
#Aruna