இந்தோனேசியாவில் இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி அவர் மரணித்துள்ளதுடன், கொலை என சந்தேகிக்கப்படும் ஒனேஷின் மரணத்தின் பின்னர், பிரேசில் பிரஜையான அவரது மனைவி, அவருக்கு உதவியாளராகக் இருந்தவரென கூறப்படும் பிரேசில் நாட்டுப் பெண் மற்றும் நான்கு வயதான தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய காட்சி சிசிரீவியில் பதிவாகியுள்ளன.
இந்தக் கொலையின் பின்னர் குறித்த குழுவினர் காட்டாருக்கு தப்பிச் சென்றமை ஜகார்த்தா பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி, விடுமுறையை கழிக்க தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் உதவியாளருடன் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ், இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளார்.
பெப்ரவரி 2 ஆம் திகதி அவரது செயலாளர் சுபசிங்கவை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால், அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளார்.
இதனையடுத்து குடியிருப்பு நிர்வாகம், ஜகார்த்தாவில் உள்ள அவரது குடியிருப்பை சோதனையிட்டபோது ஒனேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் குற்றம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ள போதிலும், கொலை இலங்கையில் திட்டமிடப்பட்டமை தெரியவருவதால், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்கால விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறத் தயாராக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.