துருக்கி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற பேரனர்த்தத்தால் இதுவரை 21,000க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது.
குறிப்பாக சிரியாவில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பலியான நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் சிரியாவை சேர்ந்த மீட்புப் படையான ஒயிட் ஹெல்மெட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
அதில் சிரியாவின் இட்லிப் நகருக்கு வெளியே உள்ள அர்மசான் எனும் கிராமத்தில் நிலநடுக்கத்தால் சரிந்துபோன வீட்டினுள் இருந்து சிறுவன் மீட்கப்படுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே சிறுவனின் முகம் தெரிய, வீரர்கள் அந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வெளியே வந்ததும் சந்தோஷத்தில் சிறுவன் அங்கிருந்த மீட்புப்படை வீரர்களுடன் விளையாடுகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மீட்புப்படை அதில்,’அற்புதங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. குரல்கள் வானத்தைத் தழுவுகின்றன.
பூகம்பத்தின் முதல் நாளில் சிரியாவின் இட்லிப் அருகே உள்ள அர்மனாஸ் கிராமத்தில் சரிந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து கரம் எனும் சிறுவன் மீட்கப்பட்ட தருணங்கள் மகிழ்ச்சியில் நிறைந்தன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.