வரிகளைக் குறைக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை தவறானது எனவும், குறுகிய காலத்திற்கே இந்த வரிச்சுமையை சுமக்க நேரிடும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (07) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் வருமானம் பெறும் வழிமுறைகள் கடந்த காலத்தில் படிப்படியாக அதிகரிக்கப்படவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறான ஆலோசனையின் அடிப்படையில் இந்த வரிகள் அனைத்தையும் குறைத்துள்ளார். அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி குறைக்கப்பட்டது. அப்போது, யாரும் கேட்காத வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை சிக்கலில் இட்டுச் சென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தன. வருமானம் குறைந்த பிறகு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்போம். மாற்றுக்கருத்து இருந்தால், மாற்றீட்டை ஏற்க தயாராக உள்ளோம். சர்வதேச நாண நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால், சர்வதேச பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. எனவே, குறுகிய காலத்திற்கு இந்த வரிச்சுமையை நாம் சுமக்க வேண்டியிருக்கும் என்றார்.