உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து கிடைக்கவுள்ள புற்றுநோய்க்கான மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகப் போவதாக தெரியவந்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் செலவழித்த நேரத்தினாலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு முகாமையின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நுரையீரல் புற்றுநோயைப் போலவே மார்பகப் புற்றுநோய், தைராய்டு புற்றுநோயையும் எளிதில் குணப்படுத்த முடியும் என்று அவர்கூறினார்.
மேலும், மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பிரதான நிலையமானது நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும், இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையங்கள் உள்ளதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
