225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வரிகள் பொருந்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய வரிகள் பெருமளவிலான மக்களைப் பாதித்துள்ளதை தாங்கள் அறிவதாகவும் தெரிவித்தார்.
தங்களுக்கு வேறு வழியில்லாததால், அரச வருவாயை உயர்த்துவதற்காக நேரடி வரிகளை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளும் புதிய வரிகளுக்கு உட்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஏப்ரலில் கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்த முடியாத நிலை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்புக்குப் பின்னர், அரசாங்கம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
கடன் வழங்குபவர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் நேரடி வரி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நிலைமை சீரடையும் போது, வரி விகிதங்களை மீள்பரிசீலனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரி வருமானத்தில் கணிசமான பகுதி பல அரச நிறுவனங்களை பராமரிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
எனவே யதார்த்தத்தை கருத்தில் கொண்டு சில அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.
நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் மக்கள் விரும்பத்தகாத தீர்மானங்களை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.