2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான அரசு சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு இணங்க, வழக்கு பெப்ரவரி 28-ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் வழக்கை விசாரிக்கும் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று சிறையில் அடைத்த குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 7 பேர் நீதிமன்றில் முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.